Tuesday, November 08, 2005

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?


இஸ்லாமும் பெண்களும் என்று விவாதம் வரும்போது பிற மத சகோதரர்களாலும் , ஏன் பாமர முஸ்லிம்களாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாக முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 'பலதாரமணம் ' (Polygyny) உள்ளது.

உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்றின் கருப்பொருளாக 'பலதாரமணம் ' (Polygyny) என்பதும் இருக்கிறது. எந்த அளவுக்கு அது விளங்கிக் கொள்ளப்படாததாக இன்னமும் இருந்து வருகிறதோ அந்த அளவுக்கு அது ஒரு கடினமான சப்ஜெக்ட் அல்ல. பலதாரமணத்தின் நோக்கத்தையும் , அது செயல்படுத்தப்படுவதின் காரண காரியத்தையும் விளங்கிக் கொள்வது அப்படி ஒன்றும் சிரமமான ஒன்றல்ல.

மேலும் ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் , எந்த சமூகத்தை நோக்கி பலதாரமண எதிர்ப்பு என்ற ஆயுதம் வீசப்படுகிறதோ அந்த சமூகத்தில் மற்ற சமூகங்களை விட பலதாரமணம் குறைவான சதவீதத்திலேயே இருந்து வருவதுதான். மற்ற சமுதாயத்தவரால் 'வைத்து 'க் கொள்ளப்படுகிற பெண்களின் எண்ணிக்கை கணக்கிடப்படாமல் போவதும் , முஸ்லிம்களால் சட்டபூர்வமாக (மிகக் குறைந்த சதவீதத்திலிருந்தபோதும்) மனைவியாக்கிக் கொள்ளப்படுபவள் முறையான கணக்கெடுப்பில் சேர்ந்து விடுவதும்தான் இந்த சமுதாயத்தை இந்த விஷயத்தில் முன்னிறுத்தி விடுகிறது. தன் முதுகில் இருக்கும் பெரிய வடுவை விட அடுத்தவன் முகத்தில் இருக்கும் சிறிய மச்சம் எளிதில் பார்வைக்கு கிடைப்பது போல்தான் இதுவும்.

முதலில் பலதாரமணத்தின் அடிப்படையையும் , வரலாற்றில் அதன் ஆளுமையையும் புரிந்து கொள்வது நல்லது.

பலமணம் ( Polygamy) என்பது இரு வகைப்படும். ஒரு ஆண் பல மனைவியரைக் கொண்டிருப்பது இதில் முதல் வகை. அதற்கு ஆங்கிலத்தில் Polygyny என்று பெயர். ஒரு பெண் பல கணவன்களைக் கொண்டிருப்பது இரண்டாவது வகை. இதனை ஆங்கிலத்தில் Polyandry என்று சொல்வார்கள். ஐந்து ஆண்களை கணவர்களாகக் கொண்டிருந்த மஹாபாரதக் கதையின் நாயகி பாஞ்சாலியையும் , விவாகரத்து பெறாமலே அடுத்தடுத்து ஆண்களைத் திருமணம் புரிந்து கொள்ளும் மேற்கத்திய கலாச்சார யுவதிகளையும் இரண்டாவது வகைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.



மேற்கண்ட இரு வகைகளில் முதல்வகை மட்டுமே இஸ்லாத்தில் நிபந்தனையோடு ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது வகையானது பெண்ணுரிமை பேசும் இன்றைய புரட்சிப் பெண்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது தெளிவு.



இந்த பலதாரமணம் ( Polygyny) என்பது அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான பிறகுதான் இவ்வுலகில் நடைமுறைக்கு வந்தது என்று கூறுவது வரலாற்று அபத்தம். இதற்கு மாறாக வரலாற்றில் தொன்று தொட்டு பலதாரமணம் வழக்கிலிருந்து வந்தது என்பதுதான் உண்மை. ஆப்ரஹாம் மூன்று மனைவிகளையும் , சாலமன் நூற்றுக்கணக்கான மனைவிகளையும் பெற்றிருந்ததை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. யூத மதத்தில் கூட Gersham ben yehudah என்ற மதகுரு அதற்கு எதிராக ஒரு பிரகடனத்தை வெளியிடும் வரை ஆண்களின் பலதாரமணம் நடைமுறையில் இருந்தே வந்திருக்கிறது. இந்துக்களின் வேதங்களில் குறிப்பிடப்படும் ராமனின் தந்தை தசரதன் பல மனைவிகளைக் கொண்டிருந்ததாகவும் , இந்துக்களின் கடவுளாக வர்ணிக்கப்படும் கிருஷ்ணணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகவும் அவர்களின் வேதங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது.



' இஸ்லாத்தில் பெண்களின் நிலை' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்த ஒரு இந்திய கமிட்டி , 1975 -ல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது: " 1951 முதல் 1961 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் நடைபெற்ற பலதாரமணங்களில் , முஸ்லிம்களிடையே நடைபெற்றவை 4.31 சதவீதமாகவும், இந்துக்களிடையே நடைபெற்றவை 5.06 சதவீதமாகவும் இருந்தது". இந்தியாவில் முஸ்லிம்களைத் தவிரவுள்ள யாவருக்கும் பலதாரமணம் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும்கூட முஸ்லிம்களை விட இந்துக்களே பலதாரமணத்தில் முன்ணணியில் நிற்பதைத்தான் மேற்கண்ட கணக்கெடுப்பு சுட்டுகிறது. 1954-ல் இந்திய நாடாளுமன்றம் 'ஹிந்து திருமணச் சட்டம்' என்ற ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தும்வரை இந்துக்களிடையே பலதாரமணம் இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கிறது. இன்றும்கூட, இந்திய சட்டத்தில் மட்டுமே இந்துக்களின் பலதாரமணம் தடை செய்யப்பட்டிருக்கிறதேயொழிய அவர்களின் வேதங்களில் அவையொன்றும் தடுக்கப்படவில்லை.

இஸ்லாம் ஒன்றும் பலதாரமணத்தை கட்டுப்பாடற்ற ஒன்றாக திறந்து விட்டு விடவில்லை. மனிதனின் உணர்வுகளையும் , சமச்சீரற்ற ஆண்-பெண் விகிதாச்சாரத்தையும் , அதனால் ஏற்படக்கூடிய சமூகக் குழப்பங்களையும் கருத்திற் கொண்டே இஸ்லாம் பலதாரமணத்தை வாய்ப்பளித்திருந்தாலும் கூட அதற்குத் தேவையான கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தவறவில்லை.

உலகப் பொதுமறை அல்-குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது:

" அனாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னாங்காகவோ ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள்- இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

(அத்தியாயம் 03 ; வசனம் 04)

பலதாரமணத்தை ஆகுமாக்கிக் கொள்ள இஸ்லாம் விதிக்கும் முதல் கட்டுப்பாடு மனைவியரிடையே நீங்கள் நீதமாக நடக்க வேண்டும் என்பது. அது உங்களால் இயலவில்லையென்றால் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை கூறுகிறது. மனிதன் இயற்கையிலேயே ஆசையின் வழி நடக்கும் பலவீனமான மனங்கொண்டவன் என்பதாலேயே மனைவியரிடையே அவனால் முழுவதும் நீதமாக நடக்க முடியாது என்பதையும் அல்-குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது.

" நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்துதல் சாத்தியமாகாது. ஆனால் , (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள் ; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால் , நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் , மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்".

(அத்தியாயம் 04; வசனம் 129)

எனவே , பலதாரமணம் ( Polygyny) இஸ்லாத்தில் கட்டாயமாக விதிக்கப்பட்டதோ அல்லது வலியுறுத்தப்பட்டதோ அல்ல; அனுமதியளிக்கப்பட்ட ஒன்று மட்டுமே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் திருமணம் புரிவதும், பிரம்மச்சாரியாக வாழ்வதும் எப்படி அவனது விருப்பத்தின்பாற்பட்டதோ, அதுபோலவே அவன் ஒரு பெண்ணைத் திருமணம் புரிவதும், நான்கு பெண்களைத் திருமணம் புரிவதும் இஸ்லாத்தின் பார்வையில் தனிமனிதனின் விருப்பத்தின்பாற்பட்டதே. பலதாரமணத்தை கடுமையாகவும், கண்மூடித்தனமாகவும் விமர்சித்து வரும் இன்றைய சமூகத்தில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி ஒழுக்க வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டிருப்பது எந்த வகை நியாயம் என்பது விளங்கவில்லை.

முதல் வகையில் ஒரு பெண் தனது அனைத்து உரிமைகளையும் தன்னை மணக்கும் கணவனிடமிருந்து பெற்றுக் கொள்வது சட்டபூர்வமாக்கப் படுகிறது. இரண்டாம் வகையிலோ , அந்தப் பெண் தன்னிடம் 'வந்து' போகிற ஆண்களிடமிருந்து எந்த உரிமையையும் பெற முடியாது. அத்தோடல்லாமல், அந்தப் பெண் சமூகத்தில் மதிப்பிழந்தும், பல்வேறு நோய்களின் காப்பகமாகவும் ஆகி விடுகிறாள். இதில் எது பெண்களுக்கு சுதந்திரத்தையும் , உரிமையையும் பெற்றுத் தருகிறது என்பதை நியாயவான்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இனி, பலதாரமணத்தை சமூகவியல் கண்ணோட்டத்தில் ஏன் சரி காண்கிறோம் என்பதைப் பார்ப்போம்.
(தொடர்வேன், இன்ஷா அல்லாஹ்)

10 comments:

Anonymous said...

எதிர்மறை சிந்தனை உள்ளவர்களுக்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எப்போதுமே இருவகை கண்ணோட்டம் உண்டு. முஸ்லிம் தனியார் சட்டம் எவ்வாறு மற்ற மதத்தவர்களை எவ்விதத்திலும் பாதிக்காதோ அதேபோல்தான் முஸ்லிம்களின் பலதாரமணமும் அடுத்த வீட்டுக்காரனை எவ்விதத்திலும் பாதிக்காது. ஆனாலும் அதை குறை சொல்லாமல் இருக்க முடியாது. ஏனென்றால், ஒரு முஸ்லிம் எப்படி அதைச் செய்யலாம்? அதை எப்படி நாம் அனுமதிக்கலாம்? என்ற நல்ல!!! நோக்கம்தான்.

அட்றா சக்கை said...

சுட்டு விரலே..

என்ன தான் நீர் சுட்டினாலும் இசுலாம் துவேஷர்களுக்கு எதுவும் உறைக்காது.. polygyny (Marrying more than one woman) இசுலாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது என்பது தவறான செய்தியென நினைக்கிறேன்.. நிபந்தனைகளுடன் அதிக பட்சமாக நான்கு பெண்களை மட்டுமே மணமுடிக்க இயலும்.. எனவே அந்தப் பதம் பயன்படுத்தல் தவறு என நினைக்கிறேன்.. வேண்டுமானால் polygyny என்பதை விட quadrogyny இசுலாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது எனலாம் .. அதுவும் கடும் நிபந்தனைகளுக்குட்பட்டு..

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பலதாரமணத்தை கடுமையாகவும் , கண்மூடித்தனமாகவும் விமர்சித்து வரும் இன்றைய சமூகத்தில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி ஒழுக்க வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டிருப்பது எந்த வகை நியாயம் என்பது விளங்கவில்லை.

Prostitution is not permitted by law in India.
If Hindus and Christians and others can accept that legally polygamy is not permissible why should Muslims demand that as a right. Do all countries where Muslims live permit polygamy?.

அட்றா சக்கை said...

Ravi,

Couldnt understand about your stand.

//விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி ஒழுக்க வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டிருப்பது //

Quite right.. You mean to say that prostitution is a social bane..

//If Hindus and Christians and others can accept that legally polygamy is not permissible why should Muslims demand that as a right.//

Who said Muslims demand it as a right? Personally do you know any of your muslim friends married at least to two women? (your frank opinion please)

நற்கீரன் said...

Your blog deals with three cases: treatment of women in general, and treatment of women in Islam relative to other religions or cultures, and treatment of women in regards to Polygamy.

The treatment of women in Islam cannot be adequately commented upon without taking a general position about Islam it self. “Reformers” such as http://www.muslim-refusenik.com/ take a highly liberal and modern view about Islam, and emphasize upon the progressive aspects of Islam. At one point in history Islam a was vehicle for scientific and social progress, but for past few centuries it is under stagnation or even decline. However, there are various reform movements within Islam trying to revive the progressive front and the forgotten open and knowledge striving traditions. In that context, at the beginning Islam was progressive about women rights, relative to other cultures of that time. But, today women equality and rights in general are not well protected or promoted in many Islamic countries. Taliban’s treatment of women was an extreme example.

You are absolutely right about the hypocrite nature of other religions when it comes to the issue of Polygamy. In that prarticular issue, about one man being able to marry many women, I think Islam holds a progressive stand even today. It reconizes the human tendencies, and provides a framework that can be beneficial to women. Other religions such as Hinduism, and Tamil culture do take a hypocritical position. Even in Western societies where relationships between multiple partners is common, the legal system only reconizes marriage between one man and one women.

In short, what I am trying to say is that perhaps Isalm holds a progressive position on the issue of polygamy, but in general its treament of women is not progressive. At one point in history it might have held such a progressive position relative to other cultures, but today it does not. This issue can be consided within the general concept of reform within Islam, as expressed by muslims themselves http://www.muslim-refusenik.com/.

(Please note that I do not intend to be offensive, the comments are based on my very limited knowledge about Islam.)

சினேகிதி said...

Polygeny or polygamy?

Anonymous said...

//kuran vibasarathai ozithadhu. kuranai padikum manidhargal vibasarathai ozithargala enbadhu dhan inge kelvi//
இந்த அளவிற்காவது குரானை சரிகண்டிருப்பதற்கு நன்றி.
இதேகருத்தைத் தான் பல காலமாக பலர் கூறி கொண்டிருக்கின்றனர். என்ன தான் இஸ்லாத்தை கண்ணை மூடிக் கொண்டு பழித்துக் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் இது போன்று உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது அல்லது தங்களை அறியாமலே உண்மை வெளிப் பட்டு விடுகிறது.

சுட்டுவிரல் said...

வருகையும் கருத்துக்களும் அளித்த அபூ ஆதில் ஆஸாத், பொழுது, அட்றாசக்கை, ரவி ஸ்ரீநிவாஸ், நற்கீரன், சினேகிதி, அபாபீல், ராட், பி.சி, ஜேம்ஸ்,இறை நேசன்
-அனைவருக்கும் நன்றிகள்.

பின்னூட்டங்களுக்கான என் மறுமொழியை தேவைப்பட்டால் தனிப்பதிவாக, இப்பதிவின் தொடர்ச்சிக்குப்பின்னர் தருகிறேன்.

பதிவின் பொருளுடன் பொருந்தியோ; பொருதியோ வராத பின்னூட்டங்கள் புறந்தள்ளப்படுகின்றன (கவனிக்க: புறக்கணிக்கவில்லை, புறத்தே பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்று தான்.) பொறுத்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!

நல்லடியார் said...

சுட்டுவிரல்,

தொடக்க காலத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலான ஆண்கள் அதாவது எழுநூத்தி சொச்சம் பேரில் சுமார் 300 பேர் ஹதுப்போரில் கொல்லப்பட்டார்கள். ஒட்டு மொத்த சமூகத்தையும் எதிர்த்து இஸ்லாத்தில் இணைந்த பின், கணவனை இழந்த பெண்கள் அனாதைகளாக்கப் பட்டார்கள். இந்த சூழலில்தான் மேற்ச்சொன்ன இறைவழிகாட்டல் வந்தது.

நூற்றுக்கணக்கான பெண்களை அந்தப்புற நாயகிகளாக அனுபவித்துக் கொண்டு மிருகங்களை விடகேவலமாக நடத்தப் பட்ட சமூகத்தில், அநாதைகளையும் நிர்க்கதியானவர்களையும் சட்டப்பூர்வமாக மணைவியாக்கி சமத்துவம் பேணச்சொன்ன இஸ்லாம், அதிக பட்சம் நான்கு என்ற வரையறையையும் கட்டளையாக இட்டுள்ளதையும், ஆண்களால் ஒன்றுக்கு மேற்பட்ட மணைவிகளுடன் நீதமாக நடந்து கொள்ள முடியாது என்று எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தைச் சொல்லி நீதமாக நடக்க முடியாதவர்களுக்கு ஒன்றே போதும் என்று திட்டவட்டமாகச் சொல்லி இருப்பதை சிந்திக்க மறுப்பவர்களை என்னச் சொல்லி திருத்துவது?

ஆணுக்கு இருக்கும் "நான்கு" என்ற வரையறை பெண்ணுக்கு ஏன் இல்லை? என்பவர்கள் அறிவியல்பூர்வமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு தங்களுக்கு தாங்களே முரண்படுவதை உணரவில்லை. இவர்களின் வாதம்
பலதாரமனமே தேவை இல்லை என்பதில்லை; மாறாக பெண்ணுக்கும் வேண்டும் என்பதாகவே இருக்கிறதை
கவனிக்கவும்.

//Prostitution is not permitted by law in India. If Hindus and Christians and others can accept that legally

polygamy is not permissible why should Muslims demand that as a right.// - Wed Nov 09, 09:31:49 PM, ravi

srinivas said...

சிரீனிவாஸ், உங்கள் எழுத்தைப் பார்த்தால் 'சிரி'னிவாஸ் என்று அழைக்கத் தோணுகிறது. எந்த உலகத்தில

நீங்கள் இருக்கிறீர்கள்? சிகப்பு விளக்கு பகுதிகளான மும்பை கிராண்ட் ரோடும், கலகத்தாவின் சோனா

கஞ்சும் இந்தியாவில்தான் அரசு அனுமதியுடன் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த முஸ்லிம் நான்கு மணைவிகளை மனம் செய்யும் உரிமை வேண்டும் என்று கேட்டார் என்று சொல்லுங்கள்.

Do all countries where Muslims live permit polygamy? இதுவும் நீங்கள் கேட்டதுதான். பதிலையே
கேள்வியாக மாற்றும் சாமர்த்தியம் உங்கள் போன்ற ஆங்கில புலமை கொண்ட மேதாவிகளுக்குத்தான் வரும்.

கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என்ற Single Agenda விலிருந்து சற்று வெளியேறி
இஸ்லாத்தின் நல்ல பக்கங்களை மற்றக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு எழுதவுக் கொன்க்சம் முயற்சி செய்யுங்கள்.

அன்புடன்,

Naina said...

இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
சகோதரரே!
இஸ்லாத்திற்கு எதிராக அதன் எதிரிகளாலும் இன்னும் நடுநிலையாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள முற்படும் சகோதரர்களாளும் வைக்கபடும் முக்கியமான கேள்வி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதாரமணம். எதிரிகளானாலும், நடுநிலயாளர்களானாலும், பெரும்பாலானோர் இது ஆண் பெண் சமவுரிமை என்ற நோக்கில் அனுகின்றார்கள். மிகச் சிலரே பெண்களுக்கு இழைக்கபடும் கொடுமையாக நினைக்கின்றார்கள். சகோதரர் நல்லடியாரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக) அவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிய சட்டதிட்டங்கள் 1427 ஆண்டுகளுக்கு முன் அருளபெற்றவை. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்வரை, போர்கள், போராட்டங்களால் மிக அதிகப்படியான உயிர்கள் பலியடப்பட்டன. இத்தகைய போர்களில், போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் 99 சதவீதத்திறகும் மேலாக, கிட்டதட்ட 100 சதவீதம் என்று கூறும் அளவிற்கு ஆண்களே பங்கெடுத்தார்கள். இதனால், அதிகப்படியான சிறுவயது ஆண்களின் மரணம் சமுதாயத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்தது. இந்த ஆணை மணமுடித்த பெண் விதவையாகின்றாள். இவளுடைய வாழ்க்கை பாதகாப்பு கேள்வியாகிறது. உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகள் அவளது பெற்றோர்களாளோ அல்லது உடன்பிறந்தவர்களாளோ கொடுக்கபட கூடும். உணவு உடை உறைவிடம் போன்றவை எப்படி ஒரு மனிதனால் அவனது வாழ்க்கையில் தவிர்கப்பட முடியாத ஒன்றோ, அது போன்ற குடும்ப வாழ்க்கையுமாகும். இது எல்லா மனிதர்களின் உடல் தேவை. உணவு உட்கொள்ள பொருளாதாரத்தை முறையான வழியில் ஈட்ட முடியாத ஒருவன் திருடுவது எப்படி தவிர்க்க முடியாது போகுதோ அதுபோல, குடும்ப வாழ்வின் உடல் தேவைகள் முறைப்படி வழங்கபடாதிருந்தால், முறைதவறிய வழியில் பெற வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். முறைதவறி பெறும் உடலின்பம் சமுதாயத்தின் நலனுக்கு உகந்ததல்லவே? எனவே இவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது தவிர்க்கப்பட முடியாத ஒன்று.

ஏற்கனவே பெண்களின் இறப்பு சதவீதத்தை விட ஆண்களின் இறப்பு சதவீதம் போர்களாலும், போராட்டங்களாலும் அதிகம் என்பது உண்மை. இந்த சூழலில் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மண முடிக்க வேண்டியது தான் எதார்த்தமான நிலை. சமுதாயத்தில் நல்லொழுக்கம் நிலவ வேண்டியது அவசியமானதாகும். இதில் விட்டு கொடுத்தல் என்பது சாத்தியமல்ல. எனவே ஆண் ஜனத்தொகை குறைவு என்னும் எதார்த்தமான நிலையில், விதவையான பெண்களுக்கு மணமுடித்து வைப்பது அல்லது அவர்களையும் கணவன் இறந்ததோடு கொன்று விடுவது என்ற இரண்டே தீர்வில் அவளுக்கு திருமனம் செய்து வைப்பது தான் மனித நேயமாக இருக்க முடியும். மறுமணம் என்னும் சலுகை இல்லாததினால் பெண்கள், கணவன் இறந்தததும் அவன் உடலை எறித்த சிதையிலேயே உயிரோடு எறித்த "சதி" என்னும் பெண்களுக்கு எதிராக நடந்த சமுதாய சதி நூற்றாண்டுகளுக்கு முன் வரை நமது இந்திய சமுதாயத்தில் இருந்த கொடுமையை படித்திருக்கிறோம். எனவே பலதாரமணம் சமுதாயத்தில் இருக்க வேண்டிய பரிகாரமே.
இறைவன் நன்கறிந்தவன்.

தங்களின் பதிவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்