Monday, November 14, 2005

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? ----- 2

முன் பதிவின் தொடர்ச்சி...

பலதாரமணத்தை தடை செய்திருக்கும் இடங்களிலெல்லாம் சமூக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் பல இலட்சம் ஜெர்மானியர்கள் செத்து மடிந்த போது அவர்களின் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பலதாரமணத்தை சட்டமாக்கிட கோரிக்கை எழுந்தபோது , கிறிஸ்தவ தேவாலயங்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. விளைவாக, இன்று விபச்சாரம் அங்கு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பாலியல் தொழிலாளர்கள் என்ற பெயரில் அவர்கள் கருதப்படுகிறார்கள். என்னே ஒரு சமூக அவலம்! இன்று அங்கு திருமணம் புரிபவர்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவுக்கு குறைந்துபோய் விட்டது.

ஆக, மனிதன் தன் உடலியல் தேவைகளை எந்த ரீதியிலாவது நிறைவேற்றிக் கொள்ளவே செய்கிறான். அதை முறைப்படுத்துவதே இஸ்லாத்தின் நோக்கம். கட்டுப்பாடற்ற உறவுக்கு வழிவகுக்கும் சமுதாயங்களில்தான் பாலியல் நோய்கள் அதிக விகிதத்தில் காணப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட பலதாரமணம் ( Polygyny ) சமூகத்தை சீரழிக்கும் பாலியல் நோய்க்கு மாற்றாகவும் அமைய முடியும்.

பலதாரமணம் ( Polygyny) நாம் வாழும் சமுதாயத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது எனலாம். மேலைக் கலாச்சாரத்தில் , தனக்குத்தானே சட்டங்களை வகுத்துக் கொண்ட மனிதன் பலதார மணத்தை தடுக்கப்பட்ட ஒன்றாகவே வைத்துக் கொள்ள முயல்கிறான். காரணம் , முறையாக பலதாரமணம் செய்து கொள்ளும்போது மனைவியருக்கு அவர்களுடைய உரிமைகளைக் கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறான். அவளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கு செலவழிக்க வேண்டியது அவனது கடமையாகி விடுகிறது. இந்தக் கடமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பலதாரமணத்தை தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்கிறான். பலதாரமணத்தை தடை செய்வதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் கேள்விக்குறியாகவே ஆகிவிடுகிறது.

முறையற்ற உறவின் மூலம் பிறந்த பல இலட்சக்கணக்கான பிள்ளைகளின் எதிர்காலம் சூன்யமாகவே இருந்து வருகிறது. இத்தகைய பிள்ளைகள் தனது பிறப்புக்குக் காரணமானவர்களின் அரவணைப்புக் கிடைக்காததன் பின்ணணியில் தவறான பாதைக்கு திசை திருப்பப்பட்டு எதிர்காலத்தில் குற்றவாளிகளாக, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இதுவும் பலதாரமணத்தை சட்டபூர்வமாக்காததால் ஏற்படும் பாரதூரமான தீய விளைவுகளில் ஒன்று.

இதுதான் பலதாரமணத்தை ஆதரிக்கக் காரணமா? என்றால், இது மட்டுமல்ல. இதைவிட மிக முக்கிய இயற்கைக் காரணம் ஒன்று உண்டு. அதுதான் உலகில் ஆண்-பெண் விகிதத்தில் இயற்கையாக காணப்படும் சமச்சீரற்ற போக்கு. ஆண்-பெண் இறப்பு விகிதத்திலும் மனித சமுதாயத்தில் சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது.

உலகம் முழுவதும் பெண்களின் விகிதம் ஆண்களின் விகிதத்தை விட எப்போதும் அதிகமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், (இஸ்லாமியக் கருத்துக்களை மறுத்துரைப்பவர்களின் ஊற்றுக்கண்ணாக அமெரிக்கா இருப்பதால் அதிலிருந்தே விளக்கத் தொடங்குவோம்) அங்கு ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 7.8 மில்லியன் அதிகமாகக் காணப்படுவதாக ஒரு புள்ளி விவரக் கணிப்பு கூறுகிறது. நியூயார்க் நகரில் மட்டுமே ஒரு மில்லியன் என்ற அளவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கையில் விஞ்சி நிற்கிறார்கள். இவ்வாறு மிதமிஞ்சி இருக்கும் பெண்களுக்கு திருமண உறவின் மூலம் கணவர்களை அடையும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதிலும் அங்குள்ள ஆடவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓரினப்புணர்ச்சி (Sodomites ) கொண்டவர்களாக இருப்பதாக அப்புள்ளி விவரம் மேலும் கூறுகிறது. இத்தகைய ஆண்கள் திருமண உறவுக்கு பெண்களை நாடுவதில்லையென்பதால் இங்கும் அதிகப்படியாக இருக்கும் பெண்களுக்கு திருமணம் மூலம் ஆண் துணை கிடைப்பதில் தேக்கநிலை ஏற்படுகிறது. இத்தகைய நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது . பிரிட்டனில் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாகவும் , ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள். இந்த விகிதாச்சார வேறுபாடு ரஷ்யாவில் இன்னும் அதிகமாக 9 மில்லியன் என்ற அளவில் இருந்து வருகிறது.

மேற்கண்ட நிலைகளில் ஒரு மாறுதலாக இந்தியா போன்ற வெகு சில நாடுகளில் மட்டும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை மிகைத்து நிற்கிறது. இதற்கும் ஒரு சமூக அவலமே காரணமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறப்பதை தனக்கு இடப்பட்ட சாபமாகக் கருதும் இந்திய சமூகம் சற்று காலத்திற்குமுன் வரை ஏராளமான பெண் குழந்தைகளை அவை கண்ணைத் திறந்து பார்ப்பதற்குள் மண்ணைத் தோண்டி புதைக்கும் அவலத்தினை அரங்கேற்றி வந்ததை நாமறிவோம். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் துணை கொண்டு கருவறையிலேயே அதற்கு கல்லறை கட்டுவதிலும் இந்தியாவே முன்ணணியில் நிற்கும் கொடுமையும் நாமறிந்ததே.

அப்படியானால் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கலாமே என்று குதர்க்கமாக சிலர் வாதம் செய்யலாம். ஆனால் , இத்தகைய திருமணம் விபச்சாரத்தின் மறுவடிவமாகத்தான் இருக்க முடியும். குழந்தை தன் தாயிடம் தனது தந்தை யாரென கேட்கும்போது , இதோ இவர்தான் உன் தந்தை; அல்ல.. அல்ல.. அதோ அவர்தான் உன் தந்தை; அல்லது வேறொருவராகக் கூட இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். இத்தகைய அவல நிலையை எந்த மகன் அல்லது மகள் விரும்ப முடியும் ? No one can wishes good for mankind except the Creator of the mankind.

உலகில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை மிகைத்து நிற்பதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. பொதுவாக ஆணும், பெண்ணும் இயற்கையில் சமமாகவே பிறந்து வந்தாலும், மனித சமுதாயத்தில் பெண்ணினத்தின் நோய் எதிர்ப்புத் திறன் ஆணினத்தின் நோய் எதிர்ப்புத் திறனை விட மிக அதிகம். இதன் காரணமாகவே , குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்படுகிறது. வயது முதிர்ந்த பருவத்திலும் கூட இதே நிலையே காணப்படுகிறது. நம்மைச் சுற்றி நோக்கினால் , தாத்தாக்களை விட பாட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் காண முடியும்.

பெண்களின் விகிதம் அதிகமாகக் காணப்படுவதற்கு வரலாற்று நெடுகிலும் நடைபெற்று வரும் போர்களும் மற்றுமொரு மிக முக்கிய காரணியாக இருக்கிறது. போர்களில் அதிகம் ஈடுபடுவதும், அதில் இறந்து போவதும் ஆண்களாகவே இருக்கிறார்கள். நவீன காலப் போர்களில் பெண்களும் பங்கு வகிக்கவே செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் விகிதாச்சாரம் மிகக் குறைந்த அளவாகவே காணப்படுகிறது. இவ்வாறு போர்களில் கொல்லப்படும் ஆண்களின் விதவைகளுக்கு இந்த சமுதாயம் காட்டும் தீர்வு என்ன? திருமணமாகாத ஆண் துணையைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தகைய பெண்களுக்கு இருவித வாய்ப்புகள் மட்டுமே காணப்படுகிறது. ஒன்று, அவர்கள் ஏற்கனவே திருமணமான ஆணுக்கு மற்றொரு மனைவியாக சம்மதிப்பது ; அல்லது விபச்சாரத்தைத் தேர்ந்தெடுப்பது. இதில் கண்ணியமான பெண்கள் முதலாவதையே தேர்ந்தெடுப்பார்கள்.

இத்தகைய ஒரு சூழ்நிலைதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் ஏற்பட்டது. நேசநாடுகள் ஜெர்மனியை வெற்றி கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோது , அங்கு 73 இலட்சம் பெண்கள் அனாதையாகிப் போனார்கள். அதில் 33 இலட்சம் பெண்கள் போரில் கொல்லப்பட்டவர்களின் விதவைகள். அந்த நேரத்தில் ஜெர்மனியில் 20-லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களில் 167 பெண்களுக்கு 100 ஆண்கள் என்ற விகிதத்திலேயே இருந்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. வல்லமையை நிரூபிப்பதற்காக ஏற்பட்ட போரில் வாழ்க்கையை இழந்த ஏராளமான இளம் பெண்களும், விதவைகளும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்களிடம் சில ரொட்டித் துண்டுகளுக்காக தன் கற்பை விலை பேசிய அவலத்தையும் வேதாந்தம் பேசும் இவ்வுலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது.

இஸ்லாம் அரேபியாவில் பரவத் துவங்கிய காலத்திலேயே பலதாரமணத்தை ( Polygyny) அனுமதித்ததற்கு இதுபோன்ற ஒரு சூழ்நிலையே காரணமாக அமைந்தது. இஸ்லாம் தன் ஒளியைப் பரப்பத் துவங்கியபோது அதன் மீதும், அதனாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்களால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர் அனாதரவாக நிற்க, அவர்களைக் கைப்பற்றிய எதிரிகள் தம் விருப்பம்போல் அவர்களைப் பாவிக்கலாயினர்.

முஸ்லிம் தரப்பு ஆண்களில் பலபேர் போருக்குச் சென்று மடிந்துவிட, உறவினர்களே எதிரிகளாக இருந்த அந்தக் காலகட்டத்தில், அவர்களுடைய பெண்டிர் திக்கற்று நின்றனர். அதே வகையில், கொல்லப்பட்ட எதிரிகளின் பெண்டிரும் கைதிகளாய் பிடிபட்டு நிற்க, அவர்களைத் தங்க வைக்க ஜெயிலோ, கண்காணிக்க ராணுவமோ, போலீஸ் படையோ, வழக்குகளை விசாரிக்க கோர்ட்டுகளோ, நீதிபதிகளோ, உணவு, உடை அளிக்க பொது நிதியோ இல்லாத காலம். போரில் அதிக ஆண்கள் இறந்து பட்டதால் பெண்களே அளவுக்கு மேல் மிகைத்திருந்த காலம். இத்தகைய சூழ்நிலையின் பின்ணணியில்தான் பரிகாரமாக பலதாரமணம் ( Polygyny ) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆதரவற்று நிற்கும் இத்தகைய பெண்களை பலதாரமணம் கொண்டு அரவணைக்க வேண்டுமா ? அல்லது சமூகச் சீர்கேடுகளின் பக்கம் நெட்டித்தள்ள வேண்டுமா ?
இப்போது சொல்லுங்கள். பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?

8 comments:

வாசகன் said...

"இரண்டு திருமணம் செய்துகொண்டால் அதற்கு என்ன தண்டனை தெரியுமா?"

"இரண்டு மாமியார்கள்"

வாசகன் said...

Wichita is so curious to change the Laws, when it does not suits the Logic according to his/her wisdom.

A male and a female are enjoying for miniutes and there is only the female is developing the embroyo into a life. Is this Logic?

What solution whichita's can suggest?
Let the males get the womb for coming 2000 Years?

(One Request to Pozudhu and wichita: Could you please write in Tamil? so, it will be convenient to people like me)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

what a pity there is somebody who is thinks that (s)he is too smart
but does not know that there are contraceptives and there are methods to avoid pregancy or to
terminate it.Think twice before writing something.

Machi said...

பாவமே பாவமே பாவமே...... ஏதோ சொல்லணுமேன்னு தப்பை சரின்னு வாதம்செய்யாதீர்கள். பலதார மணம் சமுக (மதம்) ஒத்துழைப்போடு ஆண்கள் செய்யும் காம களியாட்டம். முன்பு எப்படியோ இருந்துட்டு போறாங்க இனிமே அது மாதிரி தப்பு செய்யாதிங்க, காலம் முன்னேறிவிட்டது நாமும் முன்னேறுவோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் முன்னேற்றதுக்கு அழகு.

நல்லடியார் said...

//But, today women equality and rights in general are not well protected or promoted in many Islamic countries.Taliban’s treatment of women was an extreme example.// -Wed Nov 09, 10:11:57 PM, நற்கீரன் said...

நற்கீரன்,

பெண்ணுக்குறிய சமத்துவ உரிமைகள் எவை என்ற விபரத்தை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மற்ற மதங்கள் பெண்ணுக்கு வழங்கி இருக்கும் சமத்துவ உரிமைகளைச் சொல்லுங்கள். இஸ்லாம் அவற்றை
விட எப்படி அதிகமான உரிமைகளை வழங்குகிறது என்று நான் சொல்கிறேன்.

இஸ்லாமிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் ஆடம்பரத்திற்கும் அமெரிக்காவின் ஏதேச்சாதிகாரத்திற்கும் அடிபணிந்து ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களிடம் நேர்மையையும், இஸ்லாம் சொன்ன சமத்துவத்தையும் எதிர்பார்ப்பது உங்களின் அறியாமையே.

பெண்கள் முகத்தையும் மூட வேண்டும்; டிரைவிங் செய்யக் கூடாது போன்ற சட்டங்களை சவூதியில் மட்டும் கடுமையாக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் பெண்கள் அலுவலகங்களில் பணி செய்வதையும் தற்போது
அங்கீகரித்திருக்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது. முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதும் அதற்கான பரவலான விழிப்புணர்வு தேவை என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

2001 செப்டம்பர் வரை தாலிபான்கள் நல்லவர்கள். போதைப் பொருள் உற்பத்தியை ஒரே ஒரு சட்டம் போட்டு ஒழித்ததற்காக ஐ.நாவின் பாராட்டைப் பெற்றதும் அதே தாலிபான்கள்தான் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்க!

நல்லடியார் said...

//When there are less females than males why not permit women to have more than one husband. It is
possible to identify father and mother through DNA tests etc. Will you accept that as the number of
females is less than males in India Muslim Personal Law should be amended to prohibit polygamy.Is that not the most logical solution.// - Wed Nov 16, 01:51:59 PM, wichita said...

விட்சிதா,

இந்தியாவிலும் பெண்கள் விகிதம் ஆண்களின் விகிதத்தை விட அதிகம் என்றே நினைக்கிறேன். DNA
டெஸ்ட்டின் மூலம் தாய் தந்தையரை அறிந்து கொள்ளலாம் என்பதெல்லாம் சப்பைக் கட்டே தவிற வேறில்லை.

தேவையற்ற பலதாரமணத்தை தடை செய்ய எத்தனை அரசியல்வாதிகள் முன்மொழிவர்கள் என்று அப்படி
ஒரு நிலை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தில் பலதாரமணம் என்பது ஒரு வழிகாட்டலே தவிர கட்டளை அல்ல. உங்களைச் சுற்றியுள்ள
எத்தனை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மணைவிகளை மனந்துள்ளார்கள் என்று பார்த்தீர்களானால், இஸ்லாத்தின் மீதான அபத்தவாதங்கள் விளங்கும்.

//பாவமே பாவமே பாவமே...... ஏதோ சொல்லணுமேன்னு தப்பை சரின்னு வாதம்செய்யாதீர்கள். பலதார மணம் சமுக (மதம்) ஒத்துழைப்போடு ஆண்கள் செய்யும் காம களியாட்டம். முன்பு எப்படியோ இருந்துட்டு போறாங்க இனிமே அது மாதிரி தப்பு செய்யாதிங்க, காலம் முன்னேறிவிட்டது நாமும் முன்னேறுவோம். பழையன
கழிதலும் புதியன புகுதலும் முன்னேற்றதுக்கு அழகு.// - Thu Nov 17, 12:55:51 AM, குறும்பன் said...

ரொம்ப சரிதான். மதம் ஒத்துழைக்காமல் ஊருக்கு ஒன்று வைத்துக் கொண்டு கூத்தடிக்கும் விளையாட்டையும் நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். நியாயமாகப் பார்த்தால் இஸ்லாம்தான் மற்ற பழையனவற்றிற்குப் பிறகு
புகுந்த புதியன என்பது விளங்கும்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இந்தியாவிலும் பெண்கள் விகிதம் ஆண்களின் விகிதத்தை விட அதிகம் என்றே நினைக்கிறேன்.

you are wrong.there is no justification for polygamy
whether it is being practised
or not.

வாசகன் said...

//there is no justification for polygamy
whether it is being practised
or not.//

ஆண்களின் பலதாரமண சாத்தியங்களை; இஸ்லாமிய மதம் அதை எவ்வாறான சூழலில் அனுமதிக்கிறது என்பதையும் சுட்டுவிரல் விளக்கி விட்ட சூழலில் ரவியின் மேற்கண்ட வார்த்தைகள், எதிர்த்திட வேண்டுமே என்கிற அவருடைய நிலைப்பாட்டைனைத் தாம் தெரிவிக்கின்றன. அல்லது, அவர் முழு கட்டுரையை வாசித்திருக்கவில்லையோ....?