Monday, November 14, 2005

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? ----- 2

முன் பதிவின் தொடர்ச்சி...

பலதாரமணத்தை தடை செய்திருக்கும் இடங்களிலெல்லாம் சமூக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் பல இலட்சம் ஜெர்மானியர்கள் செத்து மடிந்த போது அவர்களின் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பலதாரமணத்தை சட்டமாக்கிட கோரிக்கை எழுந்தபோது , கிறிஸ்தவ தேவாலயங்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. விளைவாக, இன்று விபச்சாரம் அங்கு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பாலியல் தொழிலாளர்கள் என்ற பெயரில் அவர்கள் கருதப்படுகிறார்கள். என்னே ஒரு சமூக அவலம்! இன்று அங்கு திருமணம் புரிபவர்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவுக்கு குறைந்துபோய் விட்டது.

ஆக, மனிதன் தன் உடலியல் தேவைகளை எந்த ரீதியிலாவது நிறைவேற்றிக் கொள்ளவே செய்கிறான். அதை முறைப்படுத்துவதே இஸ்லாத்தின் நோக்கம். கட்டுப்பாடற்ற உறவுக்கு வழிவகுக்கும் சமுதாயங்களில்தான் பாலியல் நோய்கள் அதிக விகிதத்தில் காணப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட பலதாரமணம் ( Polygyny ) சமூகத்தை சீரழிக்கும் பாலியல் நோய்க்கு மாற்றாகவும் அமைய முடியும்.

பலதாரமணம் ( Polygyny) நாம் வாழும் சமுதாயத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது எனலாம். மேலைக் கலாச்சாரத்தில் , தனக்குத்தானே சட்டங்களை வகுத்துக் கொண்ட மனிதன் பலதார மணத்தை தடுக்கப்பட்ட ஒன்றாகவே வைத்துக் கொள்ள முயல்கிறான். காரணம் , முறையாக பலதாரமணம் செய்து கொள்ளும்போது மனைவியருக்கு அவர்களுடைய உரிமைகளைக் கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறான். அவளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கு செலவழிக்க வேண்டியது அவனது கடமையாகி விடுகிறது. இந்தக் கடமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பலதாரமணத்தை தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்கிறான். பலதாரமணத்தை தடை செய்வதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் கேள்விக்குறியாகவே ஆகிவிடுகிறது.

முறையற்ற உறவின் மூலம் பிறந்த பல இலட்சக்கணக்கான பிள்ளைகளின் எதிர்காலம் சூன்யமாகவே இருந்து வருகிறது. இத்தகைய பிள்ளைகள் தனது பிறப்புக்குக் காரணமானவர்களின் அரவணைப்புக் கிடைக்காததன் பின்ணணியில் தவறான பாதைக்கு திசை திருப்பப்பட்டு எதிர்காலத்தில் குற்றவாளிகளாக, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இதுவும் பலதாரமணத்தை சட்டபூர்வமாக்காததால் ஏற்படும் பாரதூரமான தீய விளைவுகளில் ஒன்று.

இதுதான் பலதாரமணத்தை ஆதரிக்கக் காரணமா? என்றால், இது மட்டுமல்ல. இதைவிட மிக முக்கிய இயற்கைக் காரணம் ஒன்று உண்டு. அதுதான் உலகில் ஆண்-பெண் விகிதத்தில் இயற்கையாக காணப்படும் சமச்சீரற்ற போக்கு. ஆண்-பெண் இறப்பு விகிதத்திலும் மனித சமுதாயத்தில் சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது.

உலகம் முழுவதும் பெண்களின் விகிதம் ஆண்களின் விகிதத்தை விட எப்போதும் அதிகமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், (இஸ்லாமியக் கருத்துக்களை மறுத்துரைப்பவர்களின் ஊற்றுக்கண்ணாக அமெரிக்கா இருப்பதால் அதிலிருந்தே விளக்கத் தொடங்குவோம்) அங்கு ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 7.8 மில்லியன் அதிகமாகக் காணப்படுவதாக ஒரு புள்ளி விவரக் கணிப்பு கூறுகிறது. நியூயார்க் நகரில் மட்டுமே ஒரு மில்லியன் என்ற அளவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கையில் விஞ்சி நிற்கிறார்கள். இவ்வாறு மிதமிஞ்சி இருக்கும் பெண்களுக்கு திருமண உறவின் மூலம் கணவர்களை அடையும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதிலும் அங்குள்ள ஆடவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓரினப்புணர்ச்சி (Sodomites ) கொண்டவர்களாக இருப்பதாக அப்புள்ளி விவரம் மேலும் கூறுகிறது. இத்தகைய ஆண்கள் திருமண உறவுக்கு பெண்களை நாடுவதில்லையென்பதால் இங்கும் அதிகப்படியாக இருக்கும் பெண்களுக்கு திருமணம் மூலம் ஆண் துணை கிடைப்பதில் தேக்கநிலை ஏற்படுகிறது. இத்தகைய நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது . பிரிட்டனில் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாகவும் , ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள். இந்த விகிதாச்சார வேறுபாடு ரஷ்யாவில் இன்னும் அதிகமாக 9 மில்லியன் என்ற அளவில் இருந்து வருகிறது.

மேற்கண்ட நிலைகளில் ஒரு மாறுதலாக இந்தியா போன்ற வெகு சில நாடுகளில் மட்டும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை மிகைத்து நிற்கிறது. இதற்கும் ஒரு சமூக அவலமே காரணமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறப்பதை தனக்கு இடப்பட்ட சாபமாகக் கருதும் இந்திய சமூகம் சற்று காலத்திற்குமுன் வரை ஏராளமான பெண் குழந்தைகளை அவை கண்ணைத் திறந்து பார்ப்பதற்குள் மண்ணைத் தோண்டி புதைக்கும் அவலத்தினை அரங்கேற்றி வந்ததை நாமறிவோம். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் துணை கொண்டு கருவறையிலேயே அதற்கு கல்லறை கட்டுவதிலும் இந்தியாவே முன்ணணியில் நிற்கும் கொடுமையும் நாமறிந்ததே.

அப்படியானால் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கலாமே என்று குதர்க்கமாக சிலர் வாதம் செய்யலாம். ஆனால் , இத்தகைய திருமணம் விபச்சாரத்தின் மறுவடிவமாகத்தான் இருக்க முடியும். குழந்தை தன் தாயிடம் தனது தந்தை யாரென கேட்கும்போது , இதோ இவர்தான் உன் தந்தை; அல்ல.. அல்ல.. அதோ அவர்தான் உன் தந்தை; அல்லது வேறொருவராகக் கூட இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். இத்தகைய அவல நிலையை எந்த மகன் அல்லது மகள் விரும்ப முடியும் ? No one can wishes good for mankind except the Creator of the mankind.

உலகில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை மிகைத்து நிற்பதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. பொதுவாக ஆணும், பெண்ணும் இயற்கையில் சமமாகவே பிறந்து வந்தாலும், மனித சமுதாயத்தில் பெண்ணினத்தின் நோய் எதிர்ப்புத் திறன் ஆணினத்தின் நோய் எதிர்ப்புத் திறனை விட மிக அதிகம். இதன் காரணமாகவே , குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்படுகிறது. வயது முதிர்ந்த பருவத்திலும் கூட இதே நிலையே காணப்படுகிறது. நம்மைச் சுற்றி நோக்கினால் , தாத்தாக்களை விட பாட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் காண முடியும்.

பெண்களின் விகிதம் அதிகமாகக் காணப்படுவதற்கு வரலாற்று நெடுகிலும் நடைபெற்று வரும் போர்களும் மற்றுமொரு மிக முக்கிய காரணியாக இருக்கிறது. போர்களில் அதிகம் ஈடுபடுவதும், அதில் இறந்து போவதும் ஆண்களாகவே இருக்கிறார்கள். நவீன காலப் போர்களில் பெண்களும் பங்கு வகிக்கவே செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் விகிதாச்சாரம் மிகக் குறைந்த அளவாகவே காணப்படுகிறது. இவ்வாறு போர்களில் கொல்லப்படும் ஆண்களின் விதவைகளுக்கு இந்த சமுதாயம் காட்டும் தீர்வு என்ன? திருமணமாகாத ஆண் துணையைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தகைய பெண்களுக்கு இருவித வாய்ப்புகள் மட்டுமே காணப்படுகிறது. ஒன்று, அவர்கள் ஏற்கனவே திருமணமான ஆணுக்கு மற்றொரு மனைவியாக சம்மதிப்பது ; அல்லது விபச்சாரத்தைத் தேர்ந்தெடுப்பது. இதில் கண்ணியமான பெண்கள் முதலாவதையே தேர்ந்தெடுப்பார்கள்.

இத்தகைய ஒரு சூழ்நிலைதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் ஏற்பட்டது. நேசநாடுகள் ஜெர்மனியை வெற்றி கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோது , அங்கு 73 இலட்சம் பெண்கள் அனாதையாகிப் போனார்கள். அதில் 33 இலட்சம் பெண்கள் போரில் கொல்லப்பட்டவர்களின் விதவைகள். அந்த நேரத்தில் ஜெர்மனியில் 20-லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களில் 167 பெண்களுக்கு 100 ஆண்கள் என்ற விகிதத்திலேயே இருந்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. வல்லமையை நிரூபிப்பதற்காக ஏற்பட்ட போரில் வாழ்க்கையை இழந்த ஏராளமான இளம் பெண்களும், விதவைகளும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்களிடம் சில ரொட்டித் துண்டுகளுக்காக தன் கற்பை விலை பேசிய அவலத்தையும் வேதாந்தம் பேசும் இவ்வுலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது.

இஸ்லாம் அரேபியாவில் பரவத் துவங்கிய காலத்திலேயே பலதாரமணத்தை ( Polygyny) அனுமதித்ததற்கு இதுபோன்ற ஒரு சூழ்நிலையே காரணமாக அமைந்தது. இஸ்லாம் தன் ஒளியைப் பரப்பத் துவங்கியபோது அதன் மீதும், அதனாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்களால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர் அனாதரவாக நிற்க, அவர்களைக் கைப்பற்றிய எதிரிகள் தம் விருப்பம்போல் அவர்களைப் பாவிக்கலாயினர்.

முஸ்லிம் தரப்பு ஆண்களில் பலபேர் போருக்குச் சென்று மடிந்துவிட, உறவினர்களே எதிரிகளாக இருந்த அந்தக் காலகட்டத்தில், அவர்களுடைய பெண்டிர் திக்கற்று நின்றனர். அதே வகையில், கொல்லப்பட்ட எதிரிகளின் பெண்டிரும் கைதிகளாய் பிடிபட்டு நிற்க, அவர்களைத் தங்க வைக்க ஜெயிலோ, கண்காணிக்க ராணுவமோ, போலீஸ் படையோ, வழக்குகளை விசாரிக்க கோர்ட்டுகளோ, நீதிபதிகளோ, உணவு, உடை அளிக்க பொது நிதியோ இல்லாத காலம். போரில் அதிக ஆண்கள் இறந்து பட்டதால் பெண்களே அளவுக்கு மேல் மிகைத்திருந்த காலம். இத்தகைய சூழ்நிலையின் பின்ணணியில்தான் பரிகாரமாக பலதாரமணம் ( Polygyny ) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆதரவற்று நிற்கும் இத்தகைய பெண்களை பலதாரமணம் கொண்டு அரவணைக்க வேண்டுமா ? அல்லது சமூகச் சீர்கேடுகளின் பக்கம் நெட்டித்தள்ள வேண்டுமா ?
இப்போது சொல்லுங்கள். பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?

Tuesday, November 08, 2005

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?


இஸ்லாமும் பெண்களும் என்று விவாதம் வரும்போது பிற மத சகோதரர்களாலும் , ஏன் பாமர முஸ்லிம்களாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாக முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 'பலதாரமணம் ' (Polygyny) உள்ளது.

உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்றின் கருப்பொருளாக 'பலதாரமணம் ' (Polygyny) என்பதும் இருக்கிறது. எந்த அளவுக்கு அது விளங்கிக் கொள்ளப்படாததாக இன்னமும் இருந்து வருகிறதோ அந்த அளவுக்கு அது ஒரு கடினமான சப்ஜெக்ட் அல்ல. பலதாரமணத்தின் நோக்கத்தையும் , அது செயல்படுத்தப்படுவதின் காரண காரியத்தையும் விளங்கிக் கொள்வது அப்படி ஒன்றும் சிரமமான ஒன்றல்ல.

மேலும் ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் , எந்த சமூகத்தை நோக்கி பலதாரமண எதிர்ப்பு என்ற ஆயுதம் வீசப்படுகிறதோ அந்த சமூகத்தில் மற்ற சமூகங்களை விட பலதாரமணம் குறைவான சதவீதத்திலேயே இருந்து வருவதுதான். மற்ற சமுதாயத்தவரால் 'வைத்து 'க் கொள்ளப்படுகிற பெண்களின் எண்ணிக்கை கணக்கிடப்படாமல் போவதும் , முஸ்லிம்களால் சட்டபூர்வமாக (மிகக் குறைந்த சதவீதத்திலிருந்தபோதும்) மனைவியாக்கிக் கொள்ளப்படுபவள் முறையான கணக்கெடுப்பில் சேர்ந்து விடுவதும்தான் இந்த சமுதாயத்தை இந்த விஷயத்தில் முன்னிறுத்தி விடுகிறது. தன் முதுகில் இருக்கும் பெரிய வடுவை விட அடுத்தவன் முகத்தில் இருக்கும் சிறிய மச்சம் எளிதில் பார்வைக்கு கிடைப்பது போல்தான் இதுவும்.

முதலில் பலதாரமணத்தின் அடிப்படையையும் , வரலாற்றில் அதன் ஆளுமையையும் புரிந்து கொள்வது நல்லது.

பலமணம் ( Polygamy) என்பது இரு வகைப்படும். ஒரு ஆண் பல மனைவியரைக் கொண்டிருப்பது இதில் முதல் வகை. அதற்கு ஆங்கிலத்தில் Polygyny என்று பெயர். ஒரு பெண் பல கணவன்களைக் கொண்டிருப்பது இரண்டாவது வகை. இதனை ஆங்கிலத்தில் Polyandry என்று சொல்வார்கள். ஐந்து ஆண்களை கணவர்களாகக் கொண்டிருந்த மஹாபாரதக் கதையின் நாயகி பாஞ்சாலியையும் , விவாகரத்து பெறாமலே அடுத்தடுத்து ஆண்களைத் திருமணம் புரிந்து கொள்ளும் மேற்கத்திய கலாச்சார யுவதிகளையும் இரண்டாவது வகைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.



மேற்கண்ட இரு வகைகளில் முதல்வகை மட்டுமே இஸ்லாத்தில் நிபந்தனையோடு ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது வகையானது பெண்ணுரிமை பேசும் இன்றைய புரட்சிப் பெண்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது தெளிவு.



இந்த பலதாரமணம் ( Polygyny) என்பது அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான பிறகுதான் இவ்வுலகில் நடைமுறைக்கு வந்தது என்று கூறுவது வரலாற்று அபத்தம். இதற்கு மாறாக வரலாற்றில் தொன்று தொட்டு பலதாரமணம் வழக்கிலிருந்து வந்தது என்பதுதான் உண்மை. ஆப்ரஹாம் மூன்று மனைவிகளையும் , சாலமன் நூற்றுக்கணக்கான மனைவிகளையும் பெற்றிருந்ததை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. யூத மதத்தில் கூட Gersham ben yehudah என்ற மதகுரு அதற்கு எதிராக ஒரு பிரகடனத்தை வெளியிடும் வரை ஆண்களின் பலதாரமணம் நடைமுறையில் இருந்தே வந்திருக்கிறது. இந்துக்களின் வேதங்களில் குறிப்பிடப்படும் ராமனின் தந்தை தசரதன் பல மனைவிகளைக் கொண்டிருந்ததாகவும் , இந்துக்களின் கடவுளாக வர்ணிக்கப்படும் கிருஷ்ணணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகவும் அவர்களின் வேதங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது.



' இஸ்லாத்தில் பெண்களின் நிலை' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்த ஒரு இந்திய கமிட்டி , 1975 -ல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது: " 1951 முதல் 1961 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் நடைபெற்ற பலதாரமணங்களில் , முஸ்லிம்களிடையே நடைபெற்றவை 4.31 சதவீதமாகவும், இந்துக்களிடையே நடைபெற்றவை 5.06 சதவீதமாகவும் இருந்தது". இந்தியாவில் முஸ்லிம்களைத் தவிரவுள்ள யாவருக்கும் பலதாரமணம் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும்கூட முஸ்லிம்களை விட இந்துக்களே பலதாரமணத்தில் முன்ணணியில் நிற்பதைத்தான் மேற்கண்ட கணக்கெடுப்பு சுட்டுகிறது. 1954-ல் இந்திய நாடாளுமன்றம் 'ஹிந்து திருமணச் சட்டம்' என்ற ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தும்வரை இந்துக்களிடையே பலதாரமணம் இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கிறது. இன்றும்கூட, இந்திய சட்டத்தில் மட்டுமே இந்துக்களின் பலதாரமணம் தடை செய்யப்பட்டிருக்கிறதேயொழிய அவர்களின் வேதங்களில் அவையொன்றும் தடுக்கப்படவில்லை.

இஸ்லாம் ஒன்றும் பலதாரமணத்தை கட்டுப்பாடற்ற ஒன்றாக திறந்து விட்டு விடவில்லை. மனிதனின் உணர்வுகளையும் , சமச்சீரற்ற ஆண்-பெண் விகிதாச்சாரத்தையும் , அதனால் ஏற்படக்கூடிய சமூகக் குழப்பங்களையும் கருத்திற் கொண்டே இஸ்லாம் பலதாரமணத்தை வாய்ப்பளித்திருந்தாலும் கூட அதற்குத் தேவையான கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தவறவில்லை.

உலகப் பொதுமறை அல்-குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது:

" அனாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னாங்காகவோ ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள்- இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

(அத்தியாயம் 03 ; வசனம் 04)

பலதாரமணத்தை ஆகுமாக்கிக் கொள்ள இஸ்லாம் விதிக்கும் முதல் கட்டுப்பாடு மனைவியரிடையே நீங்கள் நீதமாக நடக்க வேண்டும் என்பது. அது உங்களால் இயலவில்லையென்றால் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை கூறுகிறது. மனிதன் இயற்கையிலேயே ஆசையின் வழி நடக்கும் பலவீனமான மனங்கொண்டவன் என்பதாலேயே மனைவியரிடையே அவனால் முழுவதும் நீதமாக நடக்க முடியாது என்பதையும் அல்-குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது.

" நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்துதல் சாத்தியமாகாது. ஆனால் , (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள் ; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால் , நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் , மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்".

(அத்தியாயம் 04; வசனம் 129)

எனவே , பலதாரமணம் ( Polygyny) இஸ்லாத்தில் கட்டாயமாக விதிக்கப்பட்டதோ அல்லது வலியுறுத்தப்பட்டதோ அல்ல; அனுமதியளிக்கப்பட்ட ஒன்று மட்டுமே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் திருமணம் புரிவதும், பிரம்மச்சாரியாக வாழ்வதும் எப்படி அவனது விருப்பத்தின்பாற்பட்டதோ, அதுபோலவே அவன் ஒரு பெண்ணைத் திருமணம் புரிவதும், நான்கு பெண்களைத் திருமணம் புரிவதும் இஸ்லாத்தின் பார்வையில் தனிமனிதனின் விருப்பத்தின்பாற்பட்டதே. பலதாரமணத்தை கடுமையாகவும், கண்மூடித்தனமாகவும் விமர்சித்து வரும் இன்றைய சமூகத்தில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி ஒழுக்க வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டிருப்பது எந்த வகை நியாயம் என்பது விளங்கவில்லை.

முதல் வகையில் ஒரு பெண் தனது அனைத்து உரிமைகளையும் தன்னை மணக்கும் கணவனிடமிருந்து பெற்றுக் கொள்வது சட்டபூர்வமாக்கப் படுகிறது. இரண்டாம் வகையிலோ , அந்தப் பெண் தன்னிடம் 'வந்து' போகிற ஆண்களிடமிருந்து எந்த உரிமையையும் பெற முடியாது. அத்தோடல்லாமல், அந்தப் பெண் சமூகத்தில் மதிப்பிழந்தும், பல்வேறு நோய்களின் காப்பகமாகவும் ஆகி விடுகிறாள். இதில் எது பெண்களுக்கு சுதந்திரத்தையும் , உரிமையையும் பெற்றுத் தருகிறது என்பதை நியாயவான்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இனி, பலதாரமணத்தை சமூகவியல் கண்ணோட்டத்தில் ஏன் சரி காண்கிறோம் என்பதைப் பார்ப்போம்.
(தொடர்வேன், இன்ஷா அல்லாஹ்)